Saturday, January 06, 2007

உலகில் குற்றங்கள் குறைய . . .

வணக்கம் வலைப்பதிவர்களே,

வருகைக்கு நன்றி. இந்த (2007) ஆண்டின் என் படைப்புக்களை இட இந்தப் பதிவினைத் துவக்கியிருக்கிறேன்.

முதல் சிந்தனையாக 'உலகில் குற்றங்கள் குறைய . . .' என்ன வழி? என ஆராய்கிறது இக்கட்டுரை.

குற்றவாளிகள் குறைந்தால் குற்றங்கள் குறையும். குற்றவாளிகள் எங்கிருந்து உருவாகிறார்கள்? கவனிக்கப்படாத குடும்பங்களிலிருந்துதான். எப்படி? குடும்ப வாழ்க்கை குலைந்துவிட்டது.

கூட்டுக்குடும்பம் தனிக்குடும்பமானது. இப்போது தனிக்குடும்பமும் சிதைகிறது. கணவனும் மனைவியும் வேலைக்குச் செல்கிறார்கள் வீடுகள் பூட்டிக்கிடக்கின்றன. அப்படியே திறந்திருந்தாலும் எந்நேரமும் அங்கே தொலைக்காட்சியின் ஆட்சி. பேசிக்கொள்வதே அரிதாகிவிட்டது. குறுக்கீடுகள் கூடிவிட்டன. இயந்திரத் தனமான சுயநலம் மிகுந்த வாழ்க்கை அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

எப்படி நிறுவனங்களைக் நிலை நிறுத்த நிர்வகிக்க அதிகாரிகள் அவசியமோ அதே போல, அதைவிட முக்கியமாக குடும்பத்தைக் கவனிக்கவும் அவசியம் ஒருவர் வேண்டும். அவர் அக்குடும்பத்தை அக்கறையோடு கவனித்து அன்பைப் பொழிந்து கோயிலாக்க வேண்டும். சமுதாயம் என்கிற கட்டடத்தின் அடிப்படைச் செங்கலான குடும்பம் அக்கறையோடு கவனிக்கப்பட்டால் குற்றவாளிகள் உருவாகமாட்டார்கள்.

ஆனால் இன்றைய நிலை என்ன? பிள்ளைகளைக் கிரச்சில் விட்டுவிடுகிறோம். பெற்றோரை முதியோர் இல்லங்களில் விட்டு விடுகிறோம். வீட்டு வேலைகளுக்குப் பணியாட்கள். தம்பதியராக வேலைக்குச் சென்று திரும்புகிறோம். நிறுவனங்களில் வேலைகளைப் பிரித்து அவுட்சோர்சிங் விடுவது போல குடும்பத்தையும் பிரித்து அவுட்சோர்சிங் விட்டுவிட்டோம். இந்தச் சிந்தனை மனசுக்குள் கவிதையாக மலர்ந்தது இப்படி. ,

வாழ்க்கையிலுமா அவுட்சோர்சிங்?
-----------------------------------------

நிறுவனங்களில்
வேலைகள் பிரித்து
வெளியார்க்குக் குத்தகை
விடும் அவுட்சோர்சிங் முறையை
வாழ்க்கைக்கும்
வகுத்துக்கொண்டதுதான்
வருத்தமளிக்கிறது!

மனிதன்
வாழ்க்கையைப் பிரித்து
பெற்றோர் பேணுதலை முதியோர் இல்லங்களுக்கும்
பிள்ளை வளர்த்தலைப் பிள்ளைக் காப்பகங்களுக்கும்
பிரித்துக் கொடுத்து
அன்பு காட்டுதல் முதல் அரவணைப்பது வரை
அனைத்தையுமே 'அவுட் சோர்சிங்' விட்டுவிட்டான்!!

கணவனும் மனனவியும்
காலை முதல் மாலை வரை
அலுவலகம் சென்றுவிட்டு
இரவுத் தங்கலுக்காக மட்டுமே
இல்லம் திரும்புவதால்
வீடுகள் எல்லாம்
'தங்கும் விடுதிகளா'கிக் கொண்டிருக்கின்றன.
இதனால் வங்கிக் கணக்குகள்
வானம் தொட்டாலும்
பேட்டை தோறும் உள்ள
பூட்டிய வீடுகள்
அன்பு வளர்க்கும்
சாத்தியக் கூறுகள்
சத்தியமாய் இல்லைதானே!

நிலை மாற என்ன செய்ய வேண்டும்? பெண்கள் குடும்பத்தைக் கவனித்துக் கோயிலாக்கும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும். பிள்ளைகள் பெரியவர்களானதும், அல்லது பிள்ளைகள் பிறக்குமுன் சில காலம் வேலைக்குச் செல்லலாம்.
ஆண்களும் வீட்டுப்பொறுப்பை ஏற்றுக்கொள்ளலாம். ஆக யாராவது ஒருவர் வீட்டைக் கவனிக்க வேண்டும். தொலைக்காட்சி பயன்பாட்டில் கட்டுப்பாடு வேண்டும்.

சமூகத்தோடு ஒன்றி வாழப் பழக வேண்டும். பல இனத்தாரோடும் இனக்கமாகப் பழகவேண்டும். உறவுகளோடும் நண்பர்களோடும் பிணைப்புக்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
சக மனிதர்களோடு அன்போடு பழக வேண்டும். அன்பு அகிலமெங்கும் ஆறாகப் பெருகி ஓடவேண்டும்.

என்ன நண்பர்களே இதனையே நம் 2007ம் ஆண்டின் தீர்மாணமாக எடுத்துக் கொள்வோமா?

0 Comments:

Post a Comment

<< Home