Monday, July 05, 2021

இன்று 5/07/2021 காலை. சமீபத்தில் ஒரு புதுப்பழக்கம் எனக்குத் தோறியிருக்கிறது. ஸ்ரீராதாகிருஷ்ணா தொலைக்காட்சித் தொடரை HOTSTAR மூலம் பார்க்க ஆரம்பித்து 100 episodes பார்த்துவிட்டோம். சினிமாவுக்கு இணையாக விறுவிறுப்பான திரைக்கதை. ஒவ்வொரு episode முடிவிலும் கிருஷ்ணர் ஒரு தத்துவம் சொல்லுவார். மற்ற தொலைக்காட்சித் தொடர்களைவிட புராண இதிகாசத் தொடர்பார்ப்பது நன்றாக இருக்கிறது. இத் தொடரில் அனைத்து நடிகர்களும் நன்றாகவே நடிக்கிறார்கள். கிராபிக்‌ஸ் நன்றாக இருக்கிறது. மொழியும் கவர்ந்திழுக்கிறது. அதற்காக எல்லாமே நன்று என்றும் சொல்லிவிட முடியாது. சில கமர்சியல் காரணங்களுக்காக தொடரை ஜவ்வு போல நீட்டமுயன்றிருக்கிறார்கள் சில இடங்களில். அதுபோன்ற தொய்வு ஏற்படுத்தும் இடங்களை நாம் ரிமோட்டை அழுத்திக் கடந்து போய்விடும் வசதியிருப்பதால் பெரிய இக்கட்டிலிருந்தும, விளம்பரங்களில் இருந்தும் தப்பிவிடலாம். மிக முக்கியமாக, பல தாக்கங்களை இந்தத் தொடர் எனக்குள் ஏற்படுத்தியிருக்கிறதைச் சொல்லியே ஆகவேண்டும். இது போல மற்ற புராணத் தொடர்களையும் பார்க்கும் எண்ணம் இருக்கிறது!

Saturday, January 21, 2012

இ-புத்தகம்

அன்பின் நண்பர்களே வணக்கம்,

உங்கள் கைத்தொலைபேசி ஆண்ட்ராய்டு வகையைச் சேர்ந்ததா? நீங்கள் இங்கே கீழே கொடுக்கப்பட்டுள்ள செயலியை இறக்கம் செய்து பாருங்கள். இது ஓர் இ-புத்தகம். இப்புத்தகத்தில் என்னுடைய ஒரு கவிதையும், ஒரு சிறுகதையும் உள்ளன.

இ-புத்தகம் LINK: http://bit.ly/aTamil11

இதைப் பயன்படுத்தி உங்கள் கருத்தைத் தெரியப்படுத்துங்கள். என்ன மாதிரியாக இன்னும் மாற்றங்கள் செய்யலாம் என்கிற விவரங்களை அளித்தால் அது பேருதவியாக இருக்கும்.

நன்றி

அன்புடன், வயிரவன்

Labels:

Monday, August 09, 2010

உயர்வைத் தந்த சிங்கப்பூர்


ஊரில் இருந்து
உழைக்க வந்த
வந்தேறி தான்நான்

உயர்வைத் தந்த
சிங்கப் பூரை
நினைத்துப் பார்க்கிறேன்

பாதை தோறும்
இவள் உயர்வைப்
பார்த்து மகிழ்கிறேன்

அடுக்கு மாடி
வீடு கட்டி
அழகு பார்க்கிறாள்

வீட்டின் மேலே
தோட்டம் போட்டு
விண்ணைத் தொடுகிறாள்

மண்ணைத் தோண்டி
சுரங்கம் வைத்து
இரயில்கள் விடுகிறாள்

அழகு மலர்களாகத்
தீவு முழுதும்
மலர்ந்து மணக்கிறாள்

கூட்டிக் கழித்துக்
கணக்குப் பார்த்துக்
கொள்கை வகுக்கிறாள்

அடுத்து அடுத்துச்
செய்யும் பணி
திட்ட மிடுகிறாள்

துறைகள் தோறும்
தொடர்ந்து மாற்றம்
செய்து பார்க்கிறாள்

உழைத்து உயர்ந்தும்
போதும் என்று
ஓய மறுக்கிறாள்

அழைத்துச் சென்று
அகிலம் முழுக்கக்
காட்டிச் சொல்கிறேன்

இவளைப் போல
அவர்கள் மாற
இதனைச் செய்கிறேன்

அழகுத் தீவை
நினைத்துப் பார்த்து
புல் அரிக்கிறேன்

ஆசை தீரத்
தழுவிக் கொள்ள
ஆசைப் படுகிறேன்

அடுத்த நாளே
அவள் மகனாய்
ஆகிப் போகிறேன்!

Labels:

Wednesday, January 17, 2007

மனம்

கட்டுப்பாடின்றி
தாவித்திரியும் குரங்கு!

விசா இல்லாமலே
வெளிநாடு செல்லும் கள்ளக்குடியேறி!

ஊர்தி இல்லாமலே
உலகம் சுற்றும் சுதந்திரப்பறவை!

குப்பைகள் போடும்
குப்பைத்தொட்டி!

நிர்வாணங்களை
நினைத்துப் பார்க்கும்
திருட்டுப்பயல்!

அந்தரங்கங்களை
ஆராயும் விஞ்ஞானி!

முகத்தில் ஒன்றும்
அகத்தில் ஒன்றுமான
மனிதனுக்குள் மனிதன்!

கனவில் மிதந்து
கற்பனையில் திளைக்கும் கவிஞன்!

உள்ளங்களை
ஊடுருவிப் பார்க்கும்
புற ஊதாக்கதிர்கள்!

கணக்கின்றிக்
கவலைகள் சுமக்கும் கழுதை!

ஒரு நிலையின்றித் தள்ளாடும்
குடிகாரன்!

உருவமின்றி அருவமாய்
ஆட்டிப்படைக்கும்
காட்டுமிராண்டி!

நினைவுகள் சுமந்து
நித்திரை இழக்கும்
இரவுச்சூரியன்!

அனுபவம் பெற்று
அமைதியாய் ஒருநாள்
அடங்கும் ஞானி!

கட்டுப்படுத்தி
குப்பைகள் அகற்றி
குணங்கள் சேர்த்தால் கடவுள்!

Labels:

Thursday, January 11, 2007

தமிழில் ஏராளமான காப்பியங்கள் உள்ளன!!

தமிழில் ஏராளமான காப்பியங்கள் உள்ளன!!
------------------------------------------------------
பொன்னும் மணியும் முத்தும் இரத்தினமும்
மின்னும் வைரமுமாய் எத்தனையோ? - எம்தமிழில்
கொட்டிக் கிடக்கிறதே காப்பியங்கள்! ஆதலினால்
தட்டுங்கள் நற்றமிழை இன்று!

Labels:

"தாய்த்தமிழ்"

மிகவும் பழமையானது தமிழ்!!
-------------------------------------
முத்தமிழே மூத்த மொழிகளிலே முன்னவளே!
சித்திரமே! தித்திக்கும் தேன்மொழியே! - என்றும்
அதிபதியே! அற்புதமே! எம்தமிழ்போல் இங்கே
புதியதுவும் உண்டோ புகல்?

Labels:

Wednesday, January 10, 2007

எழுத்தாளர் ஜெயந்தி சங்கரின் நூல் வெளியீடு - அழைப்பிதழ்

பிரபல எழுத்தாளர் திருமதி ஜெயந்தி சங்கரின் 4 நூல்கள்
பின்சீட் - சிறுகதைத் தொகுப்பு
வாழ்ந்து பார்க்கலாம் வா - நாவல்
பெருஞ்சுவருக்குப் பின்னே- சீனப்பெண்கள் வரலாறு
நியாயங்கள் பொதுவானவை - சிறுகதைத் தொகுப்பு

வருகிற 21 ஜனவரி 2007, ஞாயிறு மாலை 5 மணிக்கு
சிங்கப்பூர் அங் மோ கியோ நூலக அரங்கில் வெளியீடு காண்கின்றன.

சிறப்புரை : திரு. ராம. கண்ணபிரான் அவர்கள்
நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் : ரம்யா நாகேஸ்வரன்

நூலாய்வுரையாளர்கள்: மாதங்கி, பிரஷாந்தன், அருள் குமரன் மற்றும் ஹூஸெய்ன்

ஏற்பாட்டாளர்கள் : நூலக வாரியம் மற்றும் நண்பர்கள்
அனுமதி: இலவசம்

Tuesday, January 09, 2007

உயரப்பறந்து ஒர் உலகப்பார்வை

நண்பர்களே வாருங்கள் என்னோடு. உயரப்பறந்து உலகைப் பார்த்து வரலாம். நமக்காகவே பரவெளி எல்லையற்றுப் பரந்து கிடக்கிறது. இறக்கைகளைப் பொருத்திக்கொள்ளுங்கள்! தொலைநோக்கிக் கருவியினை தோளில் மாட்டிக்கொள்ளுங்கள். உச்சிக்குப்போனதும் சிலவற்றை உற்றுநோக்கத் தேவைப்படும்.

புறப்பட்டாயிற்று! இன்னும் மேலே! இன்னும் மேலே பறக்கவேண்டும்! உலகம் உருட்டுப்பந்து அளவிற்கு வந்தவுடன் நிலை கொண்டு விடலாம். ஆம் வந்துவிட்டோம் சரியான இடத்திற்கு! பாருங்கள் அங்கே .. நிலமும் நீருமாகப் பிரிந்து கிடக்கிறது உலகப்பந்து. நீர்ப்பகுதியை விடச்சிறிய நிலப்பகுதி எத்தனை கண்டங்களாக எப்படிப் பிரிந்து கிடக்கிறது பாருங்கள். அதோ ஆப்பிரிக்கா, ஆசியா, இன்னும். அதென்ன வேலிகள் போல் தெரிகிறதே. அதோ இந்தியா, பாகிஸ்த்தான், சீனா, சீனப்பெருஞ்சுவர் தெரிகிறது.

அதென்ன அங்கங்கே சிறுசிறு சலசலப்புகள்? சண்டையடித்துக் கொள்கிறார்கள்.
அண்டை நாடுகள் எப்போதும் அடித்துக்கொள்வார்கள் போலும். என்ன வெடிச்சத்தம் கேட்கிறதே. கைகால் உறுப்புக்களை இழந்து உதிரம் சொட்ட ஓடுகிறார்களே. அதோ அங்கே என்ன பூச்சி போல ஏதோ பறக்கிறதே. ஓ ஹெலிக்காப்டர் உணவுப்பொட்டலம் போடுகிறது பாதிக்கப்பட்டவர்களுக்கு. இதென்ன வேடிக்கை, குத்துப்பழி வெட்டுப்பழி என் அடித்துக்கொள்கிறார்கள். பின் அவர்களுக்குள்ளே மனிதநேயத்தோடு உதவிக்கொள்கிறார்கள். ஆச்சரியமாயில்லை?

இப்போது ஒரு கற்பனை செய்து பாருங்கள் இப்படி ..அந்த உலக உருண்டையை ஒரு மனித உருவமாக. கைகளையும் கால்களையும் நாடுகளாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த உலக மனிதன் என்ன செய்கிறான் பாருங்கள். அவனுடைய வலது கையாலேயே அவன் கண்ணைக் குத்திக் கொள்கிறானே. அவனுடைய இடக்கையால் மருந்து போட்டுக்கொள்கிறான். நெஞ்சில் தன்னைத்தானே கீறிக்கொள்கிறானே. அவனே அடித்துக்கொள்வதும், பின் அவனே மருந்திட்டுக் கொள்வதும் ஆச்சரியமாயில்லை. ஒருவேளை மூளை பிசகியிருக்குமோ?

தொலைநோக்கியை எடுத்துக்கொண்டு நாடுகளை உற்றுப்பாருங்கள். இன்னும் அதிகதிகப் பிரிவுகளையும், உட்பிரிவுகளையும், அவற்றுக்குள்ளே அடித்துக்கொள்ளல்களையும் காண்பீர்கள். மொழியால் பிரிந்துகிடக்கிறார்கள். மதத்தால் பிரிந்துகிடக்கிறார்கள். நிறத்தால், கொள்கையால், பழக்கவழக்கங்களால், செய்யும் தொழிலால் பிரிந்து கிடக்கிறார்கள். ஏன் அடித்துக்கொள்கிறார்கள்? தொலைநோக்கியை இன்னும் நீட்டிப்பாருங்கள். அங்கே மேடையில் ஒருவன் பேசிக்கொண்டிருக்கிறான் பாருங்கள். அவன் பேச்சுக்குப் பலத்த கைதட்டு. அவன் இன்னும் உணர்ச்சி வசப்பட்டுப் பேசுகிறான் பாருங்கள். அப்படி என்ன சொல்கிறான்? ‘நாமே சிறந்தவர்கள். நம் இனமே சிறந்த இனம்’ என்கிறான். கூட்டம் சேர்கிறது. அடுத்த இனத்தால் நம் இனம் நசுக்கப்படுகிறது. பொங்கியெழுங்கள், போராடுங்கள் என்று முழங்குகிறான். அனைவருக்கும் இரத்தம் சூடேறுகிறது. பொங்கியெழுகிறார்கள். போராடுகிறார்கள். இப்படித்தான் அடித்துக்கொள்ளல்கள் ஆரம்பமாகின்றன. பின் அதுவே இனங்களுக்குள்ளே தீராப்பகையாகிறது. பிரிவுகளுக்குள் வெறுப்பினை வளர்த்துவிடும் வேடிக்கை இப்போது நாள்தோறும் நடக்கிற வாடிக்கையாகிவிட்டது.
தெரிந்தோ, தெரியாமலோ, புரிந்தோ, புரியாமலோ, சுயநலத்துக்காகவோ, பொதுநலத்துக்காகவோ, புகழுக்காகவோ, போட்டிக்காகவோ, பொறாமைக்காவோ அந்த வெறுப்பு வளர்க்கும் வேள்விகள் நிகழ்த்தப்படுகின்றன. மதங்களில் எந்த மதமும் அடித்துக்கொள்ளச் சொல்லவில்லை. எல்லா மதங்களும் அன்பு காட்டத்தான் சொல்கின்றன.

பிரிவுகளை ஒழித்துவிட்டால் எல்லாம் சரியாகிவிடுமா? அது சாத்தியமா? பிரிவுகள் வளர்ச்சிக்காகவும் வசதிக்காகவும் தேவை. பின்னே என்ன செய்யவேண்டும்? ஒரு இனம் அடுத்த இனத்தை மதிப்பதும், ஒரு மதம் அடுத்த மதத்தை மதிப்பதும், பொதுவாகச்சொல்வோமானால் ஒரு பிரிவு அடுத்த பிரிவினை மதிப்பதும் எல்லை மீறாத பேச்சும் எழுத்தும், விட்டுக்கொடுத்தலும், ‘உலகம் ஒன்றே, உயிர்கள் யாவும் ஒன்றே’ என்கிற விழிப்புணர்வும்தான் இவ்வுலகை வாழவைக்கும் என்பதை உணர வேண்டும்.

அந்தக்கடமை சிந்திக்கத்தெரிந்த நம் ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. எதிரியையும் வெறுக்காத, எந்த உயிருக்கும் தீங்கு நினைக்காத மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்ளப் பழகுவோமா? நண்பர்களே

அந்தச் சிந்தனையோடு சிறகை மடக்கிக் கொள்ளுங்கள். பயணம் முடிந்தது. பத்திரமாய்த் தரையிறங்கி விட்டோம் நண்பர்களே!