Monday, January 08, 2007

படைப்புக்களால் பயன் உண்டா?

படைப்புக்களால் பயன் உண்டு. சிறுகதையோ, கவிதையோ, நாவலோ, சினிமாவோ படைப்பு எதுவாகிலும் அதன் தன்மையைப் பொருத்து வாசிப்பவருக்கு அல்லது அனுபவிப்பவருக்கு ஒரு தாக்கம் இருக்குமானால் அதுதான் பயன். நல்ல பயனாகவோ, கெட்ட பயனாகவோ இருக்கலாம். அந்தத் தாக்கம் அதன் தன்மையைப் பொருத்தும், பயனாளியின் தன்மையைப் பொருத்தும் வேறுபடலாம். சில மணித்துளிகளோ, சில மாதங்களோ அந்த தாக்கம் நீடிக்கலாம்.

நல்ல படைப்புக்கள் தொடர் சிந்தனையைத் தூண்டும். பல புதிய படைப்புக்களுக்கு அவை மூலங்களாக அமையலாம். இந்தப் பயன்களை நிகழ்காலத்தவருக்குக் கிடைக்கிற பயன்களாகக் கொள்ளலாம். இந்த வகையில் பார்த்தால் எதிர்காலப் பயன்களும் படைப்புக்களுக்கு உண்டு எனலாம். எப்படி? அவற்றை ஆவனங்களாகக் காக்கும் பட்சத்தில் அவை எழுதப்பட்ட காலத்தின் பழக்க வழக்கங்களை அறிந்து கொள்ள பெரிதும் உதவும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புக்களை யதார்த்தமாகப் படைக்கலாம். அல்லது மிகைப்படுத்தி மாறுபடுத்தியும் படைக்கலாம். அவை ஏற்படுத்தும் தாக்கம் கண்டிப்பாக அந்தச் சமூகத்தை பாதிக்கத்தான் செய்கின்றன. இதற்கு சமீபத்தில் சென்னையில் சிறுவன் ஒருவனைக் கடத்திக் கொன்ற 3 இளையர்களை உதாரணமாகச் சொல்லலாம். அவர்கள் தங்கள் வாக்கு மூத்தில் 'சினிமாவைப் பார்த்தோம். கொன்றோம்' என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆக முழுக்க படைப்பாளிதான் குற்றத்திற்குக் காரணம் என்று சொல்லவும் முடியாது. அதே நேரம் சொல்லாமல் இருக்கவும் முடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் படைப்பாளிகளுக்கு மிகப் பெரிய பொறுப்பு இருக்கிறது. வன்முறை குறைக்கலாம். வரும் சினிமா அனைத்திலும் ஹீரோக்கள் எல்லாம் எத்தனை பல சாலிகளாகவும், ஈகோ பிடித்தவர்களாகவும் சித்தரிக்கிறார்கள்.

வெகுஜன ஊடகங்களான தொலைக்காட்சியும், சினிமாவும் இந்தச் சம காலச் சமுதாயத்தில் நல்ல அல்லது கெட்ட அல்லது இரண்டும் கலந்த ஒரு தாக்கத்தினை ஏற்படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. படைப்பாளிகள் கவனத்தோடு படைக்க வேண்டும். அவர்களின் பலம் அவர்களே அறியாத பலம். அதனைக் கொண்டு சமுதாயம் மேம்படத் தேவையான படிப்புக்களைப் படைக்க வேண்டும்.